Friday, May 21, 2010

Puriyaatha Pudhir

புரியாத புதிர்

பெண்ணே...
மென்மையாக இருக்கும்
உன்னால் தான்
முட்களாய் கீறி
இதயத்தை
ரணமாக்க முடிகிறது.

பரிவுகள்
பரிதவிப்புகளை
பிரதிபலிக்கத் தெரிந்த
உன்னால் தான்
பாராமுகம்
காட்டவும் முடிகிறது.

முழுமதியை
முகத்தில் நிறைத்திருக்கும்
உன்னால் தான்
எரிமலையையும்
அவ்வப்போது
ஏவிவிட முடிகிறது.

ஆதிக்கத்திற்கெதிராய்
அறைகூவல் விடுக்கும்
உன்னால் தான்
ஆண்வர்க்கத்தை
ஆட்டுவிக்க முடிகிறது.

உணர்ச்சிகளுக்கு
உருக் கொடுக்கத் தெரிந்த
உன்னால் தான்
உள்ளத் தொடர்பின்றி
உதடுகளாலும்
பேச முடிகிறது.

அன்புச் சிறகில்
அரவணைக்க முடிந்த
உன்னால் தான்
அரக்கத்தனத்தையும்
அவிழ்த்துவிட முடிகிறது.

பெண்ணே...
ஏனின்னும் நீ
விடியாப் பொழுதாய்...
விளையாக் கதிராய்...
முடியாத் தொடராய்?
புரியா புதிராய்?

Adhu Appadiththaan

அது அப்படித்தான்!

வாடிக்கை தான்
எனினும்
அலுக்காத வேடிக்கையாய்
ஒவ்வொரு முறையும்--
சந்தைக்கடை சமாசாரங்கள்.

நாசித் துவாரங்களில்
நாற்றத்தின் அத்துமீறல்களால்
முன்னம் தின்றது
முற்படும்--
வெளிநடப்புச் செய்ய.

கழுத்தறுக்கும் வேலைகள்
கச்சிதமாய் நடக்க
உயிர் வண்டிகளின்
உதிரிப்பாகங்கள்--ஆங்காங்கே
கூறுகட்டி குந்தியிருக்கும்.

நொந்த மீன்களை
தலையில் கட்ட
வார்த்தை சாமர்த்தியங்கள்
வலைவீசும்
புத்திசாலி மீனுக்கு (?)

விலகின மாராப்பில்
விரியும் பள்ளத்தாக்குகள்;
கற்றுக்குட்டிதான் எனினும்
முங்கியெழ முண்டியடிக்கும்
விடலை விழிகள்.

மருந்தளவில் மூடப்படும்
மதர்த்த மேடுகள்,
சொன்ன விலைக்கு
வாங்கச் செய்யும்
உணர்ச்சி மையத்தில்
உடன் மின்சாரம் பாய்ச்சி!

அழுக்குப் பிரதேசத்தில்
ஆஜராகும் காற்று,
அங்கப்பிரதட்சணம் செய்யும்
கவுச்சி வாடையில்
முகம் சுளித்து.

கல்யாணமாகாத
கருப்புப் பௌர்ணமிகளின்
ஏக்கப் பெருமூச்சுகள்;
சூடு தணிக்க வந்தவர்களை-மேலும்
சூடேற்றியே திருப்பும்
செவ்விளநீர் காய்கள்.

அறுபடும் ஆடு-கோழிக்காய்
வருத்தப்பட்டாலும்
பிரியாணி ருசியோ
வாரம் தவறாமல்
வாங்கத் தூண்டும்.

Thursday, May 20, 2010

Iruppaayaa?

இருப்பாயா?

ஆக்கத்தை
அறுவடை செய்யும்
ஒரு தீப்பொறி தான்
அழிவுக்கும் வித்திடுகிறது.
ஒரு தீப்பொறி
என்னை இயக்குவதெனினும்
எரித்துப் பொசுக்குவதெனினும்
சந்தோஷமாய் சம்மதிப்பேன்,
அது நீயாக இருப்பின்!